இதயம் முரளி

Dive into nivetha jeyanathan’s latest reflections and tales, where every post reveals a new layer of her storytelling journey.

5/8/20241 min read

எல்லாப் பாட்டுமே செம ஹிட் தான்னாலும், ‘ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்’ டாப் மோஸ்ட் ஃபேவரைட்! மலேசியா வாசுதேவனுக்காக மட்டுமில்ல, நம்ம வாத்தியார் வாலியோட வரிகளுக்காகவே!

‘பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி, புக்ஸையெல்லாம் நீ சுமந்தால் பாவமடி’, ‘காத்திருந்தால் கண்மணியே பஸ் கிடைக்கும், காதலித்தால் கண்மணியே கிஸ் கிடைக்கும்-ன்னு ஸ்கூல் டைம்ல ஃப்ரண்ட்ஸ்க்குள்ள கேலி பேசிக்கிட்ட நாட்கள் உண்டு! (எஸ்! we were விளையும் பயிர் with restrictions.).

காதலிக்க ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’, கதறி கதறி அழ ‘பூங்கொடி தான் பூத்ததம்மா’, விரக்தி மனநிலையை விசிறி விட ‘இதயமே இதயமே’-ன்னு ஆல்பம் முழுக்க இளையராஜா, நம்மை இழுத்துக் கட்டி வைச்சிருப்பார்!

இதையெல்லாம் விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு!

சின்ன வயசுல காம்பவுண்டு,லைன் வீடுகள்ல குடியிருந்த போது, தெருவுக்கு ஒரு ‘அண்ணா’ இருப்பார் (க்ரஷ்-ன்ற வார்த்தையெல்லாம் அப்போ புழக்கத்துல இல்லாததால சைட்டுக்கெல்லாம் ‘அண்ணா’-ன்னு பேர் வைக்க வேண்டிய கட்டாயம். மன்னிக்கவும்).

பதின்ம வயதைக் கடந்து, ‘இளைஞன்’ என்கிற நிலைக்குள்ள எட்டு வைத்துக் கொண்டிருக்கும் உருவம்ன்னு வைச்சுக்கோங்க! பள்ளி முடித்து கல்லூரி சென்று கொண்டிருப்பவராகவோ, அல்லது அரசு வேலைக்கு பரீட்சையெழுத படித்துக் கொண்டிருப்பவராகவோ இருப்பார்! ‘படிச்சா இவனை மாதிரி படிக்கனும்’-ன்னு தெருவே பாராட்டுற மனுசன்!

‘இந்தப் பயலுக்குக் கொஞ்சம் கணக்கு சொல்லிக் குடுப்பா!, பத்தாங்க்ளாஸ்ல இத்தனை மார்க் எடுத்திருக்கான், என்ன க்ரூப் எடுத்தா நல்லாயிருக்கும்?’, பொண்ணை எங்க டியூசன் சேர்க்கலாம்?, பழைய புக்ஸ் கடை எது சீப்-ஆ இருக்கும்?’- என்பது போன்ற பெற்றோரின் கேள்விகளுக்கெல்லாம் பொறுப்பாய் பதில் சொல்லும் பொறுமைசாலி.

படிப்பாளி, புத்திசாலி, அமைதியானவன், அடக்கமானவன், கண்ணியமானவன், அப்டி,இப்டின்னு கண்டமேனிக்கு நல்ல பேரு எடுத்து வைச்சிருப்பாரு!

தினம் கோவிலுக்குப் போவாரு! ப்ளாக் அண்ட் ப்ளாக் வேஷ்டி சட்டையில, மீசை,தாடியோட கருப்பசாமி சிலை முன்னாடி அவரைப் பார்க்கலாம்!, ஏன்னா கருப்பசாமிக்கு மாலை போடுற ஆளு!

அவங்கம்மாவை தண்ணீர்க் குடம் தூக்க விட மாட்டாரு! ‘தம்பி,தம்பி முக்குக் கடையில ரெண்டு தேங்காய்ச்சில்லு வாங்கிட்டு வாப்பா. மாமா வேலைக்குப் போயிட்டாரு’-ன்னு பாவமா மூஞ்சியை வைச்சுக்கிட்டு வேலை வாங்குற ‘ஆன்ட்டி’-கிட்ட முகம் சுழிக்காம தலையாட்டுற ஆளு!

அநாவசியமான சிரிப்போ, பார்வையோ இருக்காது! தெருவுல இருக்குற அக்காக்களோட ‘ஹீ…ரோ’! பூரா புள்ளைகளும் தன்னைத் தான் பார்க்குதுன்னு தெரியும், ஆனாலும் அலட்டிக்க மாட்டாப்ல! அதுக்காக ‘கர்வி-யெல்லாம் கிடையாது! ஒரு வகையான ‘கண்ணியம்’ அது, நம்ம தெரு புள்ளைங்க அப்டின்னு!.

நம்மளப் பார்த்தா ‘என்ன பாப்பா, நல்லா படிக்குறியான்னு’-கேட்டுத் தலையை தட்டிட்டுப் போவாரு! பரவசமா,படபடப்பா இருக்கும்! ‘நான் ஒன்னும் பாப்பா இல்லன்னு செல்லமா உள்ளுக்குள்ள கோவம் கூட வரும்!

க்ரஷ்க்குக் கீழ, ரோல் மாடலுக்கு மேல வர்ற தட் ‘அண்ணாவுக்கு’ ஒரு வாய்ஸ் இருக்குங்க!

சில/பல சமயம் நைட் கரண்ட் கட் ஆனா, தெருவே வாசலுக்கு வந்துடும். ஆளாளுக்குக் கொட்டாவி விட்டபடியே கதை பேசிக்கிட்டு, கையில விசிறியோட உச்சுக் கொட்டி உட்கார்ந்திருக்கிற நேரம், நேயர் விருப்பத்திற்கிணங்க அந்த மனுசன் பாட்டு பாடுவாருங்க!

ரசிக்கத் தூண்டுற குரல் இல்ல அது. ஆனா கருமம், உதாசீனப்படுத்தவும் முடியாதுங்க!

லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, ராஜகீதத்துலாம் இந்த மாதிரி வாய்ஸ்களை நிறைய கேட்டிருப்போம்! ரேடியோல பாட்டுக் கேட்டுக் கேட்டே பாடிப் பழகின க்ரூப்பு! பெருசா சங்கீத ஞானமெல்லாம் கிடையாது! நெளிவு,சுழிவெல்லாம் இல்லாத ஒரு கட்டையான raw & ஸ்ட்ரைட் வாய்ஸ்!

குரல்ல கூச்சமோ, நடுக்கமோ இருக்காது! வரிகளை சரியா பாடுவார்! ல்,ள்,ழ் உச்சரிப்பெல்லாம் தெளிவா இருக்கும்!

கருப்பசாமிக்கும் அதே tone தான்! காதல் பாடல்களுக்கும் அதே tone தான்!

காம்பவுண்டு சுவரை ஒட்டி நிறைய அண்டாக்கள்லயும்,பானைகள்லயும் தண்ணீர் நிரப்பி வைச்சிருப்பாங்க, ஒரு பக்கம் சின்னதா சாக்கடை ஓடும்! ரெண்டுலயும் கொசு சும்மா ‘சொய்ய்ய்ய்ங்க்ன்னு’ சவுண்டு வுட்டு கலை கட்டித் திரிஞ்சிட்டிருக்கும்.

கொசுக்கிட்டயிருந்துத் தப்பிக்க போட்டிருக்கிற பாவாடையை கால் வரை இழுத்து விட்டு, அம்மாவோட முந்தானை எடுத்து கை,கழுத்தெல்லாம் மறைச்சு உட்கார்ந்தபடி, நாலடி தூரத்துல பொடுசுங்களுக்கு நடுவுல நின்னுக்கிட்டு அந்தண்ணா பாடுற பாட்டை ஆ-ன்னு கேட்டுட்டிருந்ததெல்லாம்.. ச்ச! நான் சின்ன புள்ளையாவே இருந்திருக்கலாம்!

Coming back to Idhayam.

ஏப்ரல் மே-யிலே பசுமையே இல்லே!!! -ரொம்ப ரொம்ப க்ளோஸ் டூ ஹார்ட்ங்க! அந்தப் பாட்டோட, சரணத்துல இளையராஜா வாய்ஸை ஸ்கிப் பண்ணி (ம்க்க்க்கும்) டபார்ன்னு குதிச்சீங்கன்னா,

‘டிரைவ் இன் ஹோட்டலும் சாந்தோம் பீச்சும் டல்லாய்த் தோன்றுதே பாருங்கள்’ -ன்னு ஆரம்பிக்கும்! ரெண்டு சரணத்துலயும் இந்தக் குரல்கள் ஒலிக்கும்! தீபன் சக்ரவர்த்தியும், எஸ்.என்.சுரேந்தரும் பாடியிருக்காங்களாம் இந்த வரிகளை!

அந்தக் குரலும், அந்த டோனும் ஒட்டுமொத்த 90-ஸ் வாய்ஸையும் ரெப்ரெஸண்ட் பண்ணுதுங்க! என்னை அப்பிடியே தூக்கிட்டுப் போய் அந்தண்ணா முன்னாடி உட்கார வைக்குது! அந்தக் கொசுக்கடி இரவுகளை நினைவு படுத்துது!

‘தேவதை போலொரு பெண் இங்கு வந்தது நம்பி, ஏ ராசாத்தி ரோசாப்பூ’ – இந்தப் பாட்டெல்லாம் அந்தக் கால கட்டத்தோட purity, innocence-ஐ நாலா மடிச்சு உள்ளங்கைல கொடுக்குது. ப்ச்! எப்பிடி சொல்றதுன்னு தெரியலங்க!

ஆனா ஒன்னு புரியுது! இளையராஜா… என்னைப் பிடிச்ச ஜென்ம சனி!

பி.கு: தட் ‘அண்ணா’-வை ஞாபகம் வைச்சுக்கோங்க! 2023 முடியறதுக்குள்ள கதை எழுதனும்ன்னு நினைச்சேன். ஆனா, சாண் ஏறினால் முழம் சறுக்குற மாதிரி வாழ்க்கை கொஞ்சம் தட்டுத் தடுமாறிக் கொண்டிருப்பதால், வாய்ப்பில்லாம போயிடுச்சு! 2024-கண்டிப்பா என்னை எழுத வைக்கோனும் என்ற வேண்டுதலுடன்…

Wishing you all a very happy new year மக்களே!!!